ஒரு முச்சந்திப் பிள்ளையார் சொன்னது
ஜனவரி 19th, 2012 § 4 மறுமொழிகள்
..
மகளே ஜீவா, உன் ஒவ்வொரு தேர்விலும் இப்பேரண்டம்
பிளவுற்றுப் பல்கிப் பெருகும் – உன் பயணிக்காத பாதைகள்
வேறொரு அண்டத்தில் பயணித்தனவாகும்.
உன் முன் விரியும் இரு பாதைகளில் எதிலும் நீ செல்லலாம்
கூட்டிக் கழித்துப் பார்த்தால் எதுவும் மாறி விடப் போவதில்லை,
இவ்வுலகம் ஆசையின் வடிவம்.
ஒன்றல்ல உலகம், மீண்டும் சொல்கிறேன் கேள்
(இது கவிதை), ஒன்றல்ல உலகம் – உன் ஒவ்வொரு தேர்விலும்
இப்பேரண்டம் பல்கிப் பெருகும்.
முகமற்ற சாத்தியங்களையும், இழந்த வாய்ப்புகளையும் எண்ணி
கலங்கி நில்லாதே – பலப் பேரண்டங்கள் பிறக்கக் கண்ட
முச்சந்திப் பிள்ளையார் நான்.
மகளே ஜீவா, நான் அறியாத உலகங்கள் எனக்களிக்கும் இன்பம்
நானறியும் இவ்வுலகில் என் துன்பங்கள் தீர்க்கும் மருந்தல்ல
எனில், உனக்காக வருந்துவேன்.
அறியாத போதும் அழ வைக்கும் உன் இழந்த சாத்தியங்கள்
உன்நினைவில் உனக்களிக்கும் துன்பம், நீயறியும் இவ்வுலகில்
நிழலாடவில்லையா, பெண்ணே கேள்.
காண்டீவனின் கேள்வியை எதிர்கொண்ட கண்ணன் முன்
இரு உலகங்கள் விரிந்தன – பகவத் கீதை பிறந்தது ஒன்றில்,
ஜீவகீதை பிறந்தது மற்றொன்றில்.
ஒவ்வொரு தேர்வும் ஓர் உலகாக்கும் – உண்மையைச் சொன்னால்
உனக்கழிவில்லை, உன் தேர்வுகள் பொய்க்காது, உன் சாத்தியங்கள்
இழக்கப்படுவதில்லை. நீ ஜீவபிரக்ஞா.
கேள், எனக்கொரு சிதறு தேங்காய் விடு/ விடாதே இன்னொரு உலகில்
வேறொரு ஜீவா அதைச் செய்வாள். போ. உன் வழி செல்.
என் ஆசிகள் உனக்கு உண்டெனினும்
நீ செல்லா வழியில் உன்னைப் பின் தொடர்வேன். முச்சந்தியின்
தனிமை அலுப்பாய் இருக்கிறது- கூட்டிக் கழித்துப் பார்த்தால் எதுவும்
மாறி விடாது எனினும்.
எளிய பொங்கல் நல்வாழ்த்துகள்
ஜனவரி 16th, 2012 § 2 மறுமொழிகள்
….
மிகத் தாழ்ந்த பள்ளங்கள் தங்கள்
மிக உயர்ந்த முகடுகளைக் கொண்டு
தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன-
வீழ்ச்சிகளைப் பேசுபவர்கள் மறந்து விடுகிறார்கள்
உச்சங்களும் வீழ்ச்சிகளும் ஒரு பாதையின்
இருவேறு திசைகள்; திசைமாறும் பயணத்தின்
மாறாத பாதை
நேர்கோடும் நெளிகோடும்
ஜனவரி 12th, 2012 § 3 மறுமொழிகள்
..
நேர்கோட்டுப் பயணிகளுக்குத் தெரியாது
நெளிகோட்டுப் பயணத்தின் தன்மை
வெவ்வேறு திசைகளில் புறப்பட்டுப் பயணித்து
கூர்முனையில் எதிர்கொண்டு திசைமாறும்
நேர்கோட்டுப் பயணிகளுக்குத் தெரியாது
நெளிக்கோட்டுப் பயணத்தின் மற்றுமொரு நெளிவில்
திரும்பித் தொடரும் பயணத்தில்
திசைகள் தொலையும்
ஏதோ ஒரு காரணம்
ஜனவரி 11th, 2012 § கருத்துத் தெரிவிக்கவும்
…
ஒரு புதிய கவிஞர் சிக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன், அவரது முதல் கவிதை இது.
கவின்ஞரின் பெயரைச் சொல்ல மறந்து விட்டேனே – ஜீவபிரக்ஞா
ஏதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும்
இருந்தாலும்
ஏன் என்பது மறந்தும்
எதற்கென்று தெரியாமல்
தொடர்கிறது
ஒரு சிறு அறிவிப்பு
ஜனவரி 1st, 2012 § கருத்துத் தெரிவிக்கவும்
அண்மையில் இங்கு எழுதப்பட்ட ஜெயமோகனின் “நினைவின் நதியில்” குறித்த பதிவைப் படித்திருப்பீர்கள். எனக்கு அந்தப் புத்தகத்தைக் கொடுத்த கோவை நண்பர் இன்று அழைத்து, “என்ன பாஸ், பூடகமா என்னவோ சொல்லிட்டீங்க? என்னதான் சொல்றீங்க?” என்று கேட்டார். எழுத்தில்தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது வழக்கம், பேசச் சொன்னால் சப்த நாடியும் ஒடுங்கி விடும், குரல் எழும்பாது என்பது மட்டுமல்ல, மூளையும் வேலை செய்யாது. அவரிடம் பெரிதாக எதுவும் விளக்க முடியவில்லை.
இன்று நாளெல்லாம் யோசனை செய்த நிலையில் அவர் ஏன் அப்படி நினைத்தார் என்பதற்கு சிலபல காரணங்கள் புரிந்தன. தேவைப்பட்டால் அதற்கான விளக்கங்கள் தரப்படும். ஆனால் இப்போது ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒன்று என்றால் ஒன்றல்ல, இரண்டு. இரண்டாவதை முதலில் சொல்லி விடுகிறேன்.
கள்ளிப் பெட்டி சில காலம் பரணில் இருக்கப் போகிறது. ஆங்கில எழுத்துப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளேன்.
இனி முதல் விஷயம்.
ஷேக்ஸ்பியர் எழுதிய எந்த ஒரு டிராஜடிக்கும் இணையான படைப்பு “நினைவின் நதியில்”. யாருடைய டிராஜடி, என்ன டிராஜடி என்றெல்லாம் எதுவும் கேட்காதீர்கள். எப்படி கிங் லியரும் ஹாம்லட்டும் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இன்னும் இன்னும் என்று அவற்றுக்கு அப்பால் உயர்ந்து எழும்பிக் கொண்டே இருக்கின்றனவோ, அதே போல் “நினைவின் நதியில்” நம் எளிய கேள்விகளுக்கு முழுமையான பதிலளிக்காமல் அவற்றுக்கு மேலும் ஆழம் சேர்த்து, தன் விடையிலி தன்மையை இன்னும் திடமாக நிறுவிக் கொண்டு உயர்ந்தெழும் என்பது என் கணிப்பு. இப்புத்தகம் எழுதப்பட்டு ஏழெட்டு ஆண்டுகள் ஆன நிலையில், சுந்தர ராமசாமி – ஜெயமோகன் குறித்து எதுவும் அறியாத எனக்கே அதன் பல நுண்கண்ணிகள் புலப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் பின் ஐம்பது ஆண்டுகளின் தமிழகத்தில் நிலவிய சிந்தனைச் சூழலைப் பேசும் ஐகானிக் ஸ்டேட்டஸ் இன்னும் இருபதே ஆண்டுகளில் இப்புத்தகத்துக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட ஆளுமைகளின் நினைவுகள் மறைய மறைய இப்புத்தகத்தின் தாக்கம் வலுப்பெறும் என்று தோன்றுகிறது.
சில நேரங்களில் நாம் பேசுவது அபத்தமாக இருக்கிறது என்று நாமே நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வோம். ஆனால், இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரையில், இதற்குரிய இடத்தை முதன்முதலில் கணித்தவன் என்ற பெருமை என்னையே சேர வேண்டும் என்ற பேராசை, என் தன்னடக்கத்தையும் ஜாக்கிரதையுணர்வையும்தான் அபத்தமாக நினைக்கச் செய்கிறது.
ஷேக்ஸ்பியரின் எந்த ஒரு டிராஜடிக்கும் குறைந்த படைப்பல்ல இது. அவற்றுக்கு இருக்கும் நிரந்தரத்தன்மை இதற்கும் உண்டு. என்ன டிராஜடி, யாருடைய டிராஜடி, எப்படி சொல்கிறாய் என்று எதுவும் கேட்காதீர்கள் : அவற்றைப் பேசினால் நண்பர்கள், நண்பர்களாக இல்லாதவர்கள் என்று எல்லாரும் என்னை அடிக்க வருவீர்கள்.
ஆனால் ஒன்று. நினைவின் நதியிலைப் பொறுமையாகப் படித்துப் பாருங்கள். இதில் உள்ள ஆளுமைகளை அவற்றால் சுட்டப்படும் பெயர்களோடு தொடர்புபடுத்தாமல், ரத்தமும் சதையுமாக உங்கள் அகக்கண்ணில் உருவம் பெறும் பாத்திரங்களாக ஒரு முறை, ஒரே ஒரு முறை வாசித்துப் பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்.
ஷேக்ஸ்பியரின் டிராஜடிகளில் எதை நினைவின் நதியிலுடன் ஒப்பிட்டுப் பேசலாம் என்று. அந்த வரிசையைச் சேர்ந்த படைப்பு இது.
ஒரு சிறு கெட்ட கனவு
ஜனவரி 1st, 2012 § 4 மறுமொழிகள்
நல்ல வேளை கிருஷ்ணசாமி சார் கண்ணாடி அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருந்தார் அவர் பேசுவது ஞானத்துக்குக் கேட்டது ஞானம் பேசுவது அவருக்குக் கேட்கும் கேட்காமலும் இருக்கலாம் ஆனால் அவரால் அந்தக் கண்ணாடி அறையிலிருந்து வெளியே வந்து வகுப்பு மாதிரி ஞானத்தின் மீது கை வைக்க முடியவில்லை அது வாசல்களே இல்லாத ஒரு கண்ணாடி அறை மாதிரி இருந்தது கண்ணாடி அறை என்று சொல்வதுகூட சரியில்லை தீவு என்பதுதான் சரியாக இருக்கும் மூன்றடி தொலைவில் இருக்கும் தீவு ஆர்க்டிக் கண்டத்தில் இருப்பவன்கூட இந்த காலத்தில் ஒரு நொடியில் கைபேசியில் அழைத்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டுவிட முடிகிறது ஆனால் இந்த மாதிரி இருவேறு மூன்றடி தொலைவு தீவுகளில் இருந்து கொண்டு பேச முடிவதில்லை சில விஷயங்களை மட்டும்தான் பேச முடிகிறது அப்படியே பேசினாலும் சில விஷயங்கள்தான் காதில் சரியாக விழுகிறது இந்த மாதிரி மூன்றடி தூர கண்ணாடி அறைகளில் இருப்பதைவிட ஆர்க்டிக் கண்டத்துக்கே போய் விடலாம் என்று ஞானம் நினைத்துக் கொண்டான் இருந்தாலும் இந்த மாதிரி கண்ணாடி அறைக்குள் கிருஷ்ணசாமி சார் இருப்பதில் ஒரு சௌகரியம் இருந்தது அவர் வெளியே வந்து அடிக்கவே மாட்டார் வகுப்பில் பாடத்தை கவனிப்பதைவிட அவரை கவனிக்கும் நேரமே அதிகமாக இருக்கும் சுர்ரென்று கோபம் வந்து விடும் வரச்சோலை சார் மாதிரி குனிய வைத்து முதுகில் குத்து மழை பொழிய மாட்டார் என்பதென்னவோ சரிதான் ஆனால் கிருஷ்ணசாமி சார் கையில் இருக்கும் பிரம்பு இருக்கிறதே அது எப்போது எப்படி எங்கே பாயும் என்பதைச் சொல்லவே முடியாது எனவே இந்த மாதிரி கண்ணாடி அறையில் அவர் இருந்ததும் வசதியாகத்தான் இருந்தது சில அசௌகரியங்கள் இருந்தது இல்லை என்று சொல்ல முடியாது என்ன இருந்தாலும் நேரில் பார்த்து பேசுகிற மாதிரி வருமா என்று நில்னைத்துக் கொண்டிருந்தபோது கிருஷ்ணசாமி சாரை சாலையில் கொஞ்சம் முன்னே ஞானம் பார்த்துவிட்டான் சார் சார் ரெண்டு நிமிஷம் என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் தன்னையறியாமல் ஓடினான் ஆனால் அவர் காதில் அவனது குரல் விவிவிழவில்லையோ என்னவோ கிருஷ்ணசாமி சார் சடுதியில் கூட்டத்தில் இருந்த தலைகளுள் தலையாக மறைந்து விட்டார் அப்புறம் இரண்டொரு தடவை அவரது தலை தென்பட்ட மாதிரி இருந்தது ஞானத்தை அவர் கடைசி வரை பார்க்கவே இல்லை எப்படி நடந்தது என்பது கூட புரியவில்லை கிருஷ்ணசாமி சார் கண்ணாடி அறைக்குள் இருந்தார் ஞானம் நல்ல வேளை அவர் என்னுடன் பேசியிருந்தால் அப்புறம் கண்ணாடி அறைக்குள் போயிருக்க மாட்டார் நான் இந்த மாதிரி ப்ரீயாக இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்
எரிமலைக் குழம்பில் விழுந்த மாதிரி ஞானத்தின் உலகம் சிவந்தது. அவனது கன்னங்கள் வெம்மைகூடி எரிச்சலாகி கண்ணில் முள்ளைக் குத்திய மாதிரி கண்ணீர் வடிந்தது.
“இடியட்! ராஸ்கல்!” போடா வெளியே!”
கையில் பிரம்போடு கிருஷ்ணசாமி சார் நின்று கொண்டிருந்தார்.
OoOoOoO
(ரெண்டாவது பரிசு அது இது என்று பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் யார் யாரையோ தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார்கள், நமக்கு யாரும் எதுவும் கொடுக்க மாட்டேனென்கிறார்களே என்று, உங்களிடம் சொல்வதற்கென்ன, பொறாமையாக இருக்கிறது. அதனால்தான் இந்த பின் நவீனத்துவ முயற்சி. நமக்கு என்ன கிடைக்கிறது பார்க்கலாம்)
ஆர்விக்கு ஒரு வாழ்த்து
ஜனவரி 1st, 2012 § 11 மறுமொழிகள்
பட்டாசுக் கடையையும் மிட்டாய்க் கடையையும் ஒரு சேரப் பார்க்கக் கிடைத்த குழந்தையின் கண்களில் தெரியும் பரவசத்துடன் புத்தகங்களைப் பேசும் அருமை நண்பர் வளரும் விமர்சகர் ஆர்வி அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளாய் க நா சுப்ரமண்யம் அவர்கள் எழுதிய இந்த மூன்று மேற்கோள்களையும் அன்புடன் அர்ப்பணிக்கிறேன்.
- இன்று அரசியலில் பலருக்கும், சினிமாவில் எல்லாருக்கும், உள்ளது போல இலக்கியத்தில் ஈடுபட்டுள்ள சிலருக்கு எரிச்சலூட்டுவதாக இலக்கிய விமரிசனம் அமைய வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். உண்மையானது, என் வரையில் உண்மையானது, உலகம் பூராவுக்கும் உண்மையானதாகவோ சரியானதாகவோ இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டியதில்லை. இலக்கிய அனுபவமே, ரஸனையே, தனிமனிதனுடைய, தனிப்பட்ட ஒரு காரியம்; அதிலே பொதுமை அவசியமில்லை, என் சித்தாந்தங்களில் சில பிறனுக்கு, அவனும் இலக்கியத்தில் என் அளவு ஈடுபாடுள்ளவனானால், எரிச்ச்சலூட்டத்தான் செய்யும். இந்த எரிச்சல், அதன் காரணமாக எழுகிற கோபம், இரண்டுமே நல்லதுதான் – நல்ல காரியத்துக்குப் பயன்படும். அதை விவாதித்துத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
- செய்ய வேண்டிய கார்யங்கள் நிறையவுண்டு. அதில் அடிப்படைகளை நினைவுபடுத்திக் கொள்வதும்- அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதும் ஒன்று. வேறு ஏதோ பிரமாதமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு ஸ்திரமற்ற அஸ்திவாரத்தில் கோட்டைகள் கட்டிப் பயன் இல்லை. அடிப்படைகளை நினைவுபடுத்திக் கொள்வதுடன், அடுத்தவன் என்ன செய்ய வேண்டும் என்பதை நினைக்காதிருப்பதும் நியாயமாக செய்யப்பட வேண்டிய காரியமாகவே எனக்குத் தோன்றுகிறது…
- அவரவர் அளவில், அவரவருக்குத் தெரிந்த அளவில் விமரிசனம் நையாண்டியாகவோ, விஷமத்தனமாகவோ, ஸீரியசாகவோ, தரமதிப்பீடாகவோ, பேதமையாகவோ நடந்துகொண்டேதான் வர வேண்டும். என் வழி இரண்டாமவனுக்கு சரிப்பட்டு வராது – மூன்றாவது வழி இரண்டாமவனுக்கு சரிப்பட்டு வராது – நாலாவது வழி முதல் மூன்று பேருக்கும் சரிப்பட்டு வராது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நையாண்டியாகவோ, ஒருவரை ஒருவர் பரிகசித்துக் கொள்ளலாம் – அதில் தவறில்லை. விவாதம் நடத்தி முடிவுகள் கட்டி விட்டு மேலே போ என்றோ, நீ இப்படிச் செய், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதோ சரியல்ல.
—-
சென்ற ஆண்டின் சில ரசிக்கத்தக்க விமரிசனங்களை எழுதிய ஆர்வி அவர்கள் இவ்வாண்டு கள்ளிப் பெட்டியில் பிரித்து மேயத்தக்க காத்திரமான சிறுகதைகளையும் வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
புத்தாண்டு வாழ்த்துகள்
December 31st, 2011 § 2 மறுமொழிகள்
நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புதிய முயற்சிகளில் புகும் துணிவும் அவற்றில் நிறைவும் நண்பர்கள் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அதிலும் குறிப்பாக வரசித்தன், கிரி ராமசுப்ரமணியன், நடராஜன் வேங்கடசுப்ரமணியன், ரா கிரிதரன், அஞா மற்றும் மாயக்கூத்தன் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் அடியேனின் வாழ்த்துகள் உரித்தாகுக.
பாணபத்திர பைராகிக்கு எளியேனின் நமஸ்காரங்கள்.
ஒரு சிறு புத்தக விமரிசனம்
December 31st, 2011 § 4 மறுமொழிகள்
எப்போதோ நண்பராகியிருக்க வேண்டும், ஆனால் இப்போதுதான் நட்பு பாராட்ட வாய்த்திருக்கிறது. இப்போதும் நண்பருடன் புத்தகங்களை மிகத் தீவிரமாகப் பேசும் கணங்களில் அதன் அபத்தம், முழங்கால் வரை நனைக்கும் கடலலைகளின் கீழ் பாதங்களை விட்டுத் தரை விலகுவது போன்ற ஒரு மெல்லிய தலைசுற்றல் தருவதாக இருக்கிறது. இருந்தாலும் இலக்கியத்தின் ஆனா ஆவன்னாகூட தெரியாத எனக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்த ஆண்டு இறுதியில் ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்தார் என்று உள்ளுக்குள் பெருமிதமடைகிறேன்
அவர் நேற்று அறிமுகப்படுத்திய புத்தகம் ஜெயமோகனின் “சுந்தர ராமசாமி – நினைவின் நதியில்”. இன்று படித்தேன். என்னத்தைச் சொல்ல!
அதற்குரிய மரியாதை தந்து சரியானபடி பேசவேண்டும் என்றால் புத்தகத்தை செரித்துக் கொள்ள குறைத்தது ஒரு மாத அவகாசமாவது வேண்டும். ஆனால், அவசர அவசரமாக முதல் பார்வையில் சிக்கிக் கொண்டதைப் பதிவு செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. அது என்ன என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
தற்போதைக்கு ஐந்து மேற்கோள்கள் மட்டும் இவ்விடம் கவனிக்கப்படுகிறது.
உயிர்மையின் 2005ஆம் ஆண்டு பதிப்பில் ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:
“விஷ்ணுபுரத்தில் உயர் தத்துவம் ஆட்சி செய்கிறது. அது கருணையற்றது. திட்டவட்டமான ஒரு சராசரியை நிறுவி அது அதற்கு வெளியே நீட்டியிருக்கும் அனைத்தையும் வெட்டுகிறது. தத்துவ ஞானி ஆளும் அந்நகரமே அநீதிகளின் மீதுதான் இயங்குகிறது. உயர்ந்த அழகியலும் தத்துவமும் குரூரமும் முரணின்றி இயங்குகின்றன. அதை மீறி ஞானத் தேடல் முன்னகர்கிறது. சராசரி அதை விழுங்கியபடி பின்தொடர்கிறது. ஆம், விஷ்ணுபுரம்தான் சரியான ‘ஸேன் சொசைட்டி”
(பக்கம் 136)
ஆனால் யோசித்துப் பாருங்கள், இந்த உயர் தத்துவம் எங்கிருந்து வந்தது? ஒரு உயர் படைப்பூக்கத்தின் வெளிப்பாடாகத்தானே?
இந்தப் புத்தகத்தின் 72ம் பக்கத்தில் சுந்தர ராமசாமி சொல்வதாக வரும் குறிப்பு இது:
“எழுதிட்டே இருங்க. எழுதறதுதான் மருந்து…” எழுதினால் அம்மாவை மறக்க முடியுமா என்றேன்.
“மறக்கிறதாவது? இன்னும் துல்லியமா ஞாபகத்தில் பதிவாங்க. ஆனா எழுத்தில் இருக்கற நினைவுகளில வலி இருக்காது. ஏன்னா மத்த நினைவுகளில காலம் பின்னால ஓடுது. நாம முன்னால இருக்கோம். எழுத்து எவர் டைம்லைன்னா இருக்கு…” எழுத்தின் வலிமை பற்றி பல தடவைகளிலாக சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். அவமானங்கள், இழப்புகள் போன்ற தாங்க முடியாத விஷயங்களைக்கூட எழுதும்போது இனிமையாக மாற்றிக் கொள்ளலாம். எழுத்து உருவாக்கும் உலகம் எப்படியோ தன்னை இனிதாக்கிக் கொள்கிறது. “…ஏன்னா, நிஜ வாழ்க்கையின் துன்பங்களில் ஒரு சாரம் இல்லை. இருந்தா அது நமக்குப் புரியறதில்லை. அந்தத் தத்தளிப்புதான் துக்கமே. அப்பத்தான் மனசு கிடந்து அலையடிக்குது. மரணம், அவமானம், இழப்பு, பிரிவு….. ஏன் ஏன்னுதானே நம்ம மனசு கிடந்து தவிக்குது. எழுத்தில அதெல்லாம் வாறப்ப நமக்குத் தெரியறது ஏன்னு. அதான்….”
ஒரு எழுத்தாளனைக் குறித்துச் சொல்லப்பட்டாலும் இது அனைத்து சிந்தனையாளர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். எழுதிக் காண முடியாதவர்கள் உண்மையை விவாதங்களில், தொடர்ந்த உரையாடல்களில் கண்டடையக் கூடும். ஆனால் இந்த ஏன்கள், விஷ்ணுபுரத்தை ஆளும் ஏன்கள், உண்மையானவையா?
சொந்தமாக சித்திக்கத் தெரியாததால் நான் உங்களை மீண்டும் 136ம் பக்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன். “அநீதி என்பது உரிய தர்க்கம் இல்லாமல் என்றாவது பூமி மீது நிகழ்ந்திருக்கிறதா என்ன?” என்ற கேள்வியே சுந்தர ராமசாமியின் நவீனத்துவத்திலிருந்து தன்னைப் பிரித்து விஷ்ணுபுரத்துக்குக் கொண்டு சென்றது என்று குறிப்பிட்டுவிட்டு, தர்க்கத்தின் நவீனத்துவத்துக்கு மாற்றாக வேறொன்றை முன் வைக்கிறார் ஜெயமோகன்:
“ஆன்மீகம் என்பது எப்போதும் தெளிவான விளக்கத்துக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. விஷ்ணுபுரத்தில் வரும் இரு உவமைகளைக் கடன் கொள்கிறேன். கடல் மீன், கடலை அறிய முயலுதல் அது. அங்கே தர்க்கத்துக்கு எந்த இடமும் இல்லை. வெளியே பார்ப்பதனாலும் பலன் இல்லை. உள்ளே இருக்கும் கடலையே அறிய முடியும். அவ்வறிதல் மின்னலில் புயலடிக்கும் காட்டைப் பார்க்கும் கண நேரச் சித்திரம் போல. அக்கணம் பெற்ற காட்சி மறுகணம் இல்லை. ஆகவே அது விவாதத்துக்கு அப்பாற்பட்டது, அந்தரங்கமானது.”
நான் எங்கே வருகிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன். இந்த ஆன்மீக தரிசனம் எங்கே, எழுத்தாளன் எழுதிக் கண்டு பிடிக்கிற, சிந்தனையாளன் யோசித்தும் பேசியும் கண்டு பிடிக்கிற, ஏன்கள் எங்கே? இன்னும் எளிமையாகச் சொன்னால், சிந்தனையும் இலக்கியமும் நம் தேவைகள், ஆனால் சிந்தனையாளர்களும் இலக்கியவாதிகளும் தேவையா?
உண்மையைச் சொல்கிறேன், ஜெயமோகனின் ‘நினைவின் நதியில்’ படித்து முடிக்கும்போது, “இலக்கியம் தேவைதான். ஆனால் இலக்கியவாதிகள் தேவையா?” என்ற இந்தக் கேள்விதான் எழுந்தது. அங்கு உங்களைக் கொண்டு வரவே இந்த லாஜிக்.
தேவையில்லை என்று நினைக்கிறேன்.
————-
ஜெயமோகனின் விமரிசனங்களைப் படிக்கும்போது நமக்குக் கிடைக்கும் சித்திரம் வேறு, அவரது புனைவுகளைப் படிக்கும்போது நமக்குக் கிடைக்கும் சித்திரம் வேறு. கறாரான அளவுகோலின் மொத்த உருவமாக நிற்கும் விமரிசகரது நான்கு கரங்களில் ஏந்திய ஸ்கேலும், தராசும், கோலும், கூர்மையான பேனாவும் அவரை விஷ்ணுபுரத்தின் சாவிகளுக்குரியவராகச் சித்தரிக்கின்றன. ஆனால், கதைகளிலும், இலக்கியம் மற்றும் இலக்கிய அரசியலுக்கு வெளியேயும் அவர் இவற்றை விளையாட்டுக் கருவிகளாகத் தூக்கி வீசி விடுவார் என்று நினைக்கிறேன். நினைவின் நதியில் இந்த இரண்டு ஜெயமோகன்களும் ஒருவர் குரலை ஒருவர் அடக்கிப் பேசுகிறார்கள்.
இதனால் நினைவின் நதியில் ஒரு இருமை இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. மிக ஆச்சரியமாக, முரண்பாடுகள் வழி முன்னகர்தல் என்ற கொள்கையைப் பேசும் ஜெயமோகன் இருக்கிற இடத்திலேயே ‘இயற்கையின் கூத்து’ என்று முரண்பாடுகளை அதன் விடையிலி நிலையில் சிரித்துக் கொண்டே ஏற்கக்கூடிய ஜெயமோகனும் இருக்கிறார். என்ன ஒன்று, பின்னவரின் சிரிப்பு உணர்த்தும் தரிசனங்களை முன்னவரின் ஏன்கள் தரம் பிரித்து வகை வகையாக அடுக்குகின்றன. இந்தப் புத்தகத்தில் நாம் இந்த இரு ஜெயமோகன்களையும் கண்டு திகைக்கிறோம்- யார் எவர்? இவரை விரும்புவதா வெறுப்பதா?
ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அனுபவங்களுக்கு சொற்கள் பொருள் தந்தாலும், அனுபவங்களின்முன் சொற்கள் பொருளற்றவை என்பது புரியும். இந்த இரண்டையும் அதன் தீவிர உட்பொருளில் உணர்ந்திருக்கிறார் ஜெயமோகன் என்று நினைக்கிறேன். அதனால்தான் முரண்பாடுகளைப் பற்றி சிறிதும் அச்சமின்றி அவரால் இருவிதமாகவும் பேச முடிகிறது.
இதற்கு ஒரு அருமையான காட்டு இப்புத்தகத்திலேயே இருக்கிறது. இதை இயற்கையின் கூத்து என்றுதான் சொல்ல வேண்டும், அப்படியொரு மையத்தன்மை இதில் வெளிப்படும் முரண்பாட்டில் இருக்கிறது.
சுந்தர ராமசாமியை முதன்முதலில் அவரது ஜே ஜே சில குறிப்புகள் வாயிலாக தான் எதிர்கொள்வதாக இப்புத்தகம் துவங்குகிறது. ஜே ஜே சில குறிப்புகளின் வெறுமை அறிவின் ஆணவம் அடங்கும் வெறுமை. ஆனால் அறிவுக்கு அப்பாற்பட்ட, தர்க்கத்தில் சிக்காத நோக்கு ஒன்றுண்டு என்று தான் அப்போதே அறிந்திருந்ததாக எழுதுகிறார் ஜெயமோகன்-
“அந்த நோக்கில் வாழ்க்கை ஜே ஜே உணர்ந்த அந்த வெறுமையைச் சென்றடையாது என்று சுந்தர ராமசாமிக்கு எழுதினேன். ஜே ஜே அன்னியன். அவனைவிட ஒரு சாமியார் அன்னியர். ஜே ஜெயின் கால் கீழே மண் இல்லை, சாமியாருக்குக் கீழே ஒரு பிரபஞ்சமே இருக்கிறது என்று எழுதியிருந்தேன். நான் பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சுந்தர ராமசாமி தன்னை வந்து பார்க்கும்படி எழுதியிருந்தார்.”(பக்கம் 14)
இப்படிப்பட்ட நிராகரிப்பில் துவங்கும் நட்பை அடுத்த இருநூறு பக்கங்களில் அதன் அனைத்து பரிமாணங்களிலும் பேசி விட்டு சுந்தர ராமசாமியை மொத்த முடிவாக எப்படி பார்க்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார் ஜெயமோகன்:
“அவரது கால்கள் ஊன்றி நின்ற மண்ணை நாம் நோக்குவது எங்கிருந்து அவர் எழுந்திருக்கிறார், எத்தனை தொலைவு அவர் சென்றிருக்கிறார் என்பதை உணரும் பொருட்டே. இம்மண்ணில் வைத்து அவரை எத்தனை சிறப்பாக மதிப்பிட்டாலும் அது அவரை சிறுமைப்படுத்துவதேயாகும்…:” (பக்கம் 212)
சாமியாருக்குக் கீழே ஒரு பிரபஞ்சமே இருக்கலாம், ஆனால், தர்க்கித்துக் கொண்டே இருந்த சுந்தர ராமசாமியின் கால்கள் எங்கே நிற்கின்றன என்பது பொருட்டல்ல, அவை எங்கே செல்கின்றன?- அவரது தர்க்கம் அவருக்குத் திறந்த கதவுகள், உணர்த்திய ‘மனித ஞானத்தின் ஆகச் சிறந்த கணங்கள்”!
நிராகரிப்பை ஒரு அங்கீகாரமாக ஏற்கும், ஏற்க விரும்பும் மனம்தான் முரண்படுதல்களை அறிவளவில் பொருட்படுத்தலாக விரும்பி ஏற்றுக் கொள்கிற அதே கணம் அதற்குக் காரணமானவர்களை உணர்வளவில் சினத்துப் பிணங்குகிறது, அழுகிறது.. நினைவின் நதியை ஒரே மனதின் அறிவும் உணர்வும் நிகழ்த்திக் கொண்ட முடிவற்ற உரையாடல் என்று சொல்லலாம்- அறிவின் விகசிப்பும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் அதன் ஒவ்வொரு பக்கத்தையும் நிறைக்கின்றன.
(“சுந்தர ராமசாமி – நினைவின் நதியில்” – ஜெயமோகன், ரூ. 100. உயிர்மை பதிப்பக வெளியீடு. 2005)
ஒரு முன்னுரை…
December 18th, 2011 § 5 மறுமொழிகள்
க நா சுப்ரமண்யம் அவர்கள் “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கிய வட்டக் கட்டுரைகள் தொகுப்புக்கு 1985ம் ஆண்டு எழுதிய முன்னுரை….
இந்த நூலைப் பற்றி
இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் எல்லாமே 1963-65 காகட்டத்தில் நான் முழு இலக்கியப் பத்திரிகைக்காக நடத்திய இலக்கிய வட்டத்தில் எழுதப்பட்டவை.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இவற்றைச் சேர்த்து ஒரு நூலாக வெளியிட முயலும்போது, அநேகமாக எவ்விதமான மாறுதலும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது என்பது பற்றித் தமிழ் இலக்கிய உலகம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. பெருமளவில் மாறுதல்கள் செய்ய வேண்டியிருந்திருந்தால் இத்தக் கட்டுரைகளை நான் எழுதிய நோக்கம் நிறைவேறிவிட்டதாக எண்ணி நான் பெருமைப்பட முடியும்; அதற்கு இடமில்லை.
நான் இந்தக் கட்டுரைகளை எழுதிய காலத்தில் நகுலன் எழுதத் தொடங்கியிருந்தார். ஆனால் அவருக்கு இன்று இருப்பது போல ஒரு சிறு வாசக ரசிகர் கூட்டம் இல்லை. எனக்குத் தெரிந்து அந்த நாட்களில் அசோகமித்திரன், சா கந்தசாமி, தருமு. சிவராமு, நீலபத்மநாபன், ராஜ நாராயணன், வண்ணநிலவன், வண்ணதாசன், பூமணி முதலியவர்கள் எழுதத் தொடங்கவில்லை. அதனால் அவர்களைப் பற்றி எல்லாம் இந்த நூல் கட்டுரைகளில் ஒன்றும் கூறப்படவில்லை. இன்று இந்தக் கட்டுரைகளை எழுதியிருந்தால் பழைய பெயர்களைச் சொல்லியது போல, இவர்களுடைய பெயர்களையும் அங்கங்கே சொல்லியிருப்பேன்.
இலக்கியப் போக்குகள், பத்திரிக்கைப் போக்குகள், பேராசிரியர் போக்குகள் இந்த இருபது வருஷங்களில் அப்படியொன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருந்தால் பின்னிரு போக்குகளிலும் இலக்கியத்தைப் பற்றிய வரையில் நிலமை மோசமாகயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்; ஓர் அலக்ஷ்யம் அசட்டை அதிகரித்திருப்பதாகச் சொல்லலாம். எனினும் இலக்கியப் போக்கு தனி மனித முயற்சியாக ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறதாக இன்னமும் விளங்குகிறது, தொடருகிறது.
இலக்கிய விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கையும் குறைவு. எனது நண்பர்கள் செல்லப்பா, வெங்கட சுவாமிநாதன், சுந்தர ராமசாமி, நீலபத்மநாபன் போன்றவர்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல எனக்கு விமரிசனத்தில் ஆற்றலும் குறைவு. இந்த நண்பர்களுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். இலக்கியத்தில் செய்ய வேண்டிய விமர்சனத்தைச் செய்யும் பொறுப்பை இவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று ஏற்பட்டு விட்டால், நான் விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு எனக்குப் பிடித்த நூல்களைப் படிப்பதில் எஞ்சியிருக்கும் காலத்தைச் செலவிட்டு விடுவேன்.
நான் விமர்சனம் செய்வதன் நோக்கமே ஒரு சில நூல்களாவது ஒரு சில வாசகர்களை எட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான். தமிழில் இன்னமும் நல்ல வாசகர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் அதிகம் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். நல்ல வாசக பரம்பரை இரண்டாயிரம், மூவாயிரம் என்று பெருக வேண்டும்; இது மிக அவசியம்.
இந்த நூலைத் தமிழில் இன்று இருக்கிற இருநூறு, முன்னூறு நல்ல வாசகர்களுக்கும் இலக்கிய தீபத்தை மங்க விடாமல் எண்ணெய் வார்த்து, திரி போட்டுக் காப்பாற்றிக் கொண்டிருக்கிற பத்து இருபது பெயர் சொல்லக் கூடிய இலக்கிய ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.
மைலாப்பூர், 15-12-1985, க. நா. சுப்ரமண்யம்
